பூண்டு மிளகு குழம்பை நல்ல தரமா கிராமத்து கை பக்குவத்துல இப்படி மசாலா வறுத்து அரைத்து வச்சு பாருங்க. சுவையும் மணமும் நாக்கில் எச்சில் ஊற வைக்கும்.

poondu milagu kuzhambhu
- Advertisement -

இந்த பூண்டு மிளகு குழம்பு கண்டிப்பாக அனைவரும் அடிக்கடி செய்து சாப்பிட வேண்டிய ஒன்று தான். ஏனெனில் இதில் சேர்க்கும் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போன்ற அனைத்துமே நம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவி செய்யக் கூடியது. ஆனால் பெரும்பாலனோருக்கு பூண்டின் வாடை பிடிக்காது அல்லது பூண்டு சேர்த்த குழம்பின் வாடையே கூட பிடிக்காது. இந்த சமையல் குறிப்பு பதிவில் உள்ளது போல வறுத்து அரைத்து இந்த குழம்பை வைக்கும் போது அதன் சுவை நிச்சயம் அனைவரையும் சாப்பிடத் தூண்டும். வாங்க அந்த குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த குழம்பு செய்ய முதலில் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு பத்து சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு 15 பல் பூண்டையும் தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது குழம்பை தாளித்து விடுவோம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன் அரை டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொரிந்த பிறகு உரித்து வைத்து வெங்காயத்தை இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் லேசாக வதங்கியவுடன் பூண்டையும் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

இந்த சமயத்தில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் குழம்பு மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி விடுங்கள். வெங்காயத்தில் மிளகாய் தூளை சேர்க்கும் போது பச்சை வாடையும் போய் விடும். அதே நேரத்தில் குழம்பும் நல்ல நிறத்துடன் இருக்கும். இதை வதக்கிய பிறகு இரண்டு மீடியம் சைஸ் தக்காளி சின்ன துண்டுகளாக நறுக்கி சேர்த்த பின்பு அரை டீஸ்பூன் உப்பையும் சேர்த்து தக்காளி குழைய வதங்கும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

இந்த நேரத்தில் இந்த குழம்புக்கு தேவையான மசாலாவை அரைத்துக் கொள்வோம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, ஒரு டேபிள் மல்லி, கால் டீஸ்பூன் வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய் என அனைத்தையும் சேர்த்து நிறம் மாறாமல் வாசம் வரும் வரை வறுத்து அதை தட்டில் கொட்டி ஆற வைத்து மிக்ஸியில் நைசான பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அரைத்து வைத்த இந்த பவுடரை சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குழம்பை ஒரு கொதி விடுங்கள். அதன் பிறகு கரைத்து வைத்த புளித்தண்ணீரையும் இதில் சேர்த்து குழம்பிற்கு உப்பை சரி பார்த்த பின் போதவில்லை எனில் இந்த நேரத்தில் உப்பையும் சேர்த்து ஐந்து நிமிடம் இந்த நன்றாக கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ரசத்தை நல்ல கம கமன்னு வாசத்தோடு ஒரு முறை இப்படி வதக்கி செய்து பாருங்க இது வரை இப்படி ஒரு சுவையான ரசத்தை எங்கும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க.

கடைசியாக ஒரு சின்ன கட்டி வெல்லத்தை இதில் சேர்த்து கரைந்து ஒரு கொதி வந்ததும் ஒரு கொத்து கருவேப்பிலை கொஞ்சம் கொத்தமல்லி தழைகளையும் தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். இந்தக் குழம்பு நல்ல கம கம வென்று வாசத்துடன் சாப்பிட அப்படி ஒரு சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மட்டும் கொஞ்சமாக நல்லெண்ணெய் சேர்த்துக் கொடுங்கள். நீங்களும் ஒரு முறை இதே பக்குவத்தில் இந்த குழம்பை வைத்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -