இப்படி ஒரு சிக்கன் பிரியாணியை வாழ்நாளில் சாப்பிட்டு இருக்கவே முடியாது! ரொம்பவே வித்தியாசமான முறையில் வாயில் எச்சில் ஊற வைக்கும் இந்த பிரியாணியை மிஸ் பண்ணிடாதீங்க!

chicken-briyani-coconut-milk
- Advertisement -

பிரியாணி என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. எல்லோருமே அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு பட்டியலில் முதல் இடம் வகிப்பது சிக்கன் பிரியாணி. விதவிதமான சிக்கன் பிரியாணியை சுவைப்பவர்களும் உண்டு. அந்த வகையில் இந்த முறையில் ஒருமுறை நீங்கள் பிரியாணி செய்து பாருங்கள், செய்யும் பொழுதே நாவில் ஜலம் ஊரும் அற்புத சுவை கொண்ட இந்த பிரியாணியை தவற விட்டு விடாதீர்கள். தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும் இந்த பிரியாணி தின்னத் தின்னத் திகட்டாத சுவையை கொடுக்கும். இந்த ஸ்பெஷல் பிரியாணி எப்படி செய்வது? என்பதை நீங்களும் அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

chicken

பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய தேங்காய் – அரை மூடி, சிக்கன் – அரை கிலோ, மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலா – ஒரு டீஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தயிர் – அரை கப், சோம்பு – 2 டீஸ்பூன், நெய் – தேவையான அளவு, கரி – ஒரு துண்டு, பெரிய தக்காளி – ஒன்று, இஞ்சி – ஒரு துண்டு, நட்சத்திர சோம்பு – 2, கிராம்பு – 3, பட்டை – 4, கல்பாசி – 1, ஏலக்காய் – 3, சின்ன வெங்காயம் – 15 பூண்டு பல் – 5 பச்சை மிளகாய் – 4, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, புதினா – ஒரு கைப்பிடி, பாஸ்மதி அரிசி – 2 ஆழாக்கு, பெரிய வெங்காயம் – ஒன்று, பிரிஞ்சி இலை – இரண்டு.

- Advertisement -

பிரியாணி செய்முறை விளக்கம்:
முதலில் தேங்காயை இரண்டாக உடைத்து அதில் அரை மூடி தேங்காயை மட்டும் சில்லுகளாக நறுக்கி எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். 2 முறை தேங்காய் பால் எடுத்தால் போதும். பாஸ்மதி அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதற்குள் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அரை கிலோ சிக்கணை கழுவி சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு, தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்கு எல்லா இடங்களிலும் ஒட்டும் படி பிரட்டி வைக்க வேண்டும்.

kari-thundu

இப்போது ஒரே ஒரு கரித்துண்டை எடுத்து அடுப்பில் புகை வர காட்டுங்கள். கரி அனல் தகிக்கும் பொழுது அதை அப்படியே ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு இடுக்கியால் பிடித்து சிக்கன் மீது வையுங்கள். கொஞ்சமாக சோம்பை அதன் மீது தூவி விடுங்கள். இப்பொழுது கால் டீஸ்பூன் நெய்யை சோம்பின் மீது ஊற்றுங்கள். கரித்துண்டு அனலில் நெய் உருகி, சோம்பு பொரிந்து புகை வர ஆரம்பிக்கும. ஐந்து நிமிடம் அப்படியே மூடி வைத்து விடுங்கள். பிறகு திறந்து அந்த கிண்ணத்தை தனியாக எடுத்து வைத்து விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சோம்பின் வாசம் அந்த சிக்கன் உடன் சேர்ந்து அருமையான மணத்தைக் கொடுக்கும்.

- Advertisement -

இப்போது ஒரு சிறிய பாத்திரத்தில் தேவையான அளவிற்கு நெய் விட்டு நட்சத்திர சோம்பு, கிராம்பு, பட்டை, கல்பாசி, ஏலக்காய் ஆகிய மசாலா பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் துண்டு துண்டாக வெட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும். இவற்றுடன் பச்சை மிளகாய்களை கீறி சேர்க்க வேண்டும். தக்காளித் துண்டுகளையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். இவை நன்கு வதங்கி வந்தவுடன் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்க வேண்டும். இலைகள் சுருள வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விடுங்கள்.

coconut-milk1

ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடேற்றவும். 50 கிராம் அளவிற்கு நெய் ஊற்றி காய விடுங்கள். நெய் நன்கு காய்ந்ததும் அதில் பியானி இலை சேர்த்து தாளித்து, மெல்லியதாக நீள நீளமாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு கண்ணாடி பதம் வரும் பொழுது அரைத்து வைத்துள்ள பேஸ்டை கலந்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர் நீங்கள் மசாலா சேர்த்து ஊற வைத்துள்ள கறி துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு நன்கு கலந்து விட்டுக் கொண்டே இருங்கள்.

briyani

பாதி அளவிற்கு கறி வெந்ததும் 2 ஆளாக்கு பாஸ்மதி அரிசிக்கு, 3 ஆழாக்கு தேங்காய் பால் சேர்க்க வேண்டும். தேங்காய் பால் குறைவாக இருக்கும் எனவே அதனுடன் தண்ணீர் கலந்து அளந்து சேர்த்துக் கொள்ளுங்கள். இவை நன்கு கொதித்து வரும் வேளையில் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை போட்டு உப்பு, காரம் சரி பார்த்து குக்கரை மூடி வைக்க வேண்டியது தான். ஒரே விசிலில் சிக்கன் பிரியாணி வெந்து வந்திருக்கும். அதன் பிறகு அடுப்பை அணைத்து பிரஷர் ரிலீஸ் பண்ணாமல் 20 நிமிடம் அப்படியே அடுப்பிலேயே வைத்திருங்கள். பிறகு திறந்து பார்த்தால் ரொம்ப ரொம்ப வித்தியாசமான சுவையுடன் கூடிய அட்டகாசமான பிரியாணி தயாராகி இருக்கும். நீங்கள் செய்யும் பொழுதே உங்களுக்கு சாப்பிட வேண்டும் என்ற உணர்வைத் தூண்டும் அளவிற்கு இருக்கக்கூடிய இந்த பிரியாணியை இதே முறையில் நீங்களும் வீட்டில் செய்து பார்த்து அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -