இந்த ஒரு டிஷ் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். சாதத்திற்கு குழம்பு செய்ய வேண்டிய கவலையும் இருக்காது இட்லி தோசைக்கு சைட் டிஷ் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது

thakkali
- Advertisement -

காலையில் எழுந்து குளித்து முடித்து, ரெடியாகி, வேலைக்கு சென்று, அங்குள்ள வேலைகளை சரியாக முடித்து, பிறகு தான் வீட்டிற்கு வர வேண்டும். இப்படி செய்வது எப்படி ஒரு ஆணிற்க்கு கட்டாயமான ஒரு வேலையாக இருக்கிறதோ, அதுபோலத்தான் காலையில் எழுந்து, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு இவற்றை சமைப்பதும், வீட்டில் உள்ள பெண்களுக்கான கட்டாய வேலையாக இருக்கிறது. இதனை ஒரு நாளும் அவர்களால் செய்யாமல் இருக்க முடியாது. ஆனால் வேலைக்கு செல்பவர்கள் ஏதேனும் ஒரு நாள், இரண்டு நாள் ஆபிசுக்கு லீவு போட முடியும். ஆனால் பெண்களின் நிலைமை அப்படி இல்லை. இதுவே பெண்களுக்கு உடம்பு சரியில்லை என்றாலும் அந்த நேரத்திலும் அவர்கள் தான் சமைக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற முடியாத நேரங்களில் இந்த ஒரு டிஷ் மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால், வீட்டில் உள்ளவர்களின் உணவு பிரச்சனை பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம். வாருங்கள் அது என்ன டிஷ் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
தக்காளி – ஒரு கிலோ, பூண்டு – 100 கிராம், வரமிளகாய் – 15, காஷ்மீரி சில்லி – 5, மிளகாய் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 300 கிராம், உப்பு – 2 ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 100 கிராம் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து, அவற்றை நீளவாக்கில் மிகவும் மெல்லியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிளகாய்களை அதன் காம்புகளை கிள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, 4 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

தண்ணீர் மிதமான சூட்டிற்கு வந்ததும் அதில் ஒரு கிலோ மிகவும் பழுத்த தக்காளி பழங்களை சேர்க்கவேண்டும். காய் போன்று இருக்கும் தக்காளி பழங்களை இதில் சேர்க்கக்கூடாது. அதன்பின் 15 வரமிளகாய் மற்றும் 5 காஷ்மீரி சில்லி இவற்றையும் இந்த தண்ணீரில் சேர்க்க வேண்டும். பிறகு இந்த தண்ணீர் 15 நிமிடத்திற்கு வேகமான தீயில் நன்றாக கொதிக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் தண்ணீரில் இருந்து தக்காளி மற்றும் மிளகாயை வடித்தெடுத்து, அவற்றை நன்றாக ஆறவைத்து, தக்காளிப் பழத்தின் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு, இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 200 கிராம் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அதன் பின் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இதில் நிச்சயம் தண்ணீர் சேர்க்கக் கூடாது. பிறகு நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

இதில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் வற்றி, எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது மீதம் இருக்கும் எண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். இறுதியாக இவை கெட்டியானதும் அடுப்பை அனைத்து விட்டு, நன்றாக ஆறவைத்து, ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், ஒரு மாதம் வரை இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சைடிஷ்ஷாக சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

- Advertisement -