முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள் ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடிய சஷ்டி திதியில் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள் அல்லது மாதத்திற்கு ஒருமுறை வரக்கூடிய கிருத்திகை நட்சத்திர நாளில் வழிபாடு செய்வார்கள். இயன்றவர்கள் இந்த மூன்று விதத்தையுமே முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்வார்கள். இயலாதவர்கள் ஏதாவது ஒரு விரதத்தை மட்டுமாவது மேற்கொள்வார்கள். இந்த முறை ஆவணி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகைக்கு கூடுதல் சிறப்பு இருக்கிறது. அதுதான் சஷ்டி திதியோடு வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம். அதிலும் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருவதால் நம் வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய பணம் தொடர்பான வேண்டுதலை நிறைவேற்றும் ஒரு அற்புத வழிபாடாக தான் இந்த வழிபாடு திகழும். அப்படிப்பட்ட பண தொடர்பான வேண்டுதலை நிறைவேற்றும் தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வேண்டுதலை நிறைவேற்றும் தீப வழிபாடு
பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்குரிய கிழமை. சுக்கிரன் நம்முடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய பணவரவை தரக்கூடியவர். அன்றாட தேவைகளுக்குரிய பணவரவு இருந்து விட்டாலே கடன் வாங்க வேண்டிய பிரச்சனையே இருக்காது. அதனால் கடனற்ற நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும், சுகபோகமாக வாழ வேண்டும் என்றால் நாம் சுக்கிர பகவானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சுக்கிர பகவானுக்குரிய வெள்ளிக்கிழமை அன்று கடனுக்கு காரணமாக திகழக்கூடிய செவ்வாய் பகவானின் அதிதேவதையான முருகப்பெருமானுக்குரிய சஷ்டி திதியும் கிருத்திகை நட்சத்திரமும் வருகிறது. இது எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த நாளை நாம் முழுமையாக பயன்படுத்தி கடன் தொடர்பான பிரச்சினையில் இருந்து வெளியில் வர முடியும்.
ஆவணி மாதத்தின் கிருத்திகை என்பது செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:30 மணிக்கு மேல் கிருத்திகை நட்சத்திரம் ஆரம்பம் ஆகிறது. சஷ்டி திதி என்பது மதியம் 2 மணிக்கு மேல் ஆரம்பம் ஆகிறது. இவை இரண்டும் சேர்ந்து வரக்கூடிய இந்த அற்புதமான நாளில் இரவு நேரத்தில் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் நாம் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது செவ்வாய் பகவானின் அருளால் கடன் பிரச்சனை தீர்வதற்குரிய பண வரவை சுக்கிர பகவான் தருவார்.
இந்த தீபத்தை ஏற்றுவதற்கு சுக்கிர பகவானுக்குரிய வெள்ளை மொச்சையும் செவ்வாய் பகவானுக்குரிய துவரம் பருப்பும் வேண்டும். இந்த இரண்டையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரே தட்டில் ஒரு பாதியில் வெள்ளை மொச்சையும் மற்றொரு பாதியில் துவரம் பருப்பையும் வைத்து பரப்பி வெள்ளை மொச்சைக்கும் மேல் ஒரு அகல் விளக்கையும், துவரம் பருப்பிற்கு மேல் ஒரு அகல் விளக்கையும் வைத்து நெய் ஊற்றி தீபமேற்றி முருகப் பெருமானுக்கு முன்பாக வைத்து விட வேண்டும்.
முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பாராயணம் செய்வதோடு “ஓம் சௌம் சரவணபவ” என்னும் மந்திரத்தையும் கூறி முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய முருகப்பெருமானின் அருளையும், செவ்வாய் பகவானின் அருளையும், சுக்கிர பகவானின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும். இதன் மூலம் நாம் வைத்த வேண்டுதல் விரைவில் நிறைவேறும். குறிப்பாக இந்த நாளில் பணம் தொடர்பான வேண்டுதலை முன்வைத்து வழிபாடு செய்ய அதற்கு விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: மகா பரணி தீபம் ஏற்றும் முறை
எளிதில் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தி தீபம் ஏற்றி வழிபாடு செய்து பணம் தொடர்பான வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.