குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத நிலை என்பது எந்த உறவுகளுக்குள் வேண்டுமானாலும் வரலாம். வீட்டிலுள்ள தம்பதிகள் ஒற்றுமையாக, பணிவாக, பொறுமையாக, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து இருந்தால் மட்டும் போதும் உறவுகளுக்குள் எவ்வளவு பெரிய விரிசல் வந்தாலும் அதனை அவர்களால் சரி செய்ய முடியும். ஆனால் தம்பதிகள் இடையே ஒற்றுமை இல்லாமல் போனால் அந்த குடும்பத்தின் நிலைமையை எவராலும் சரி செய்ய முடியாது. ஒரு குடும்பத்திற்கு முக்கியமான தம்பதிகளின் ஒற்றுமையை மேலோங்க செய்வதற்கான சில வழிமுறைகளை பற்றியே இங்கு அறிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டிலிருந்தபடியே செய்யும் பூஜை மற்றும் பரிகாரங்களும் சில மந்திரங்களும் கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்துவதில் பெருந் துணை புரிகின்றன.
தினமும் அதிகாலையில் வீட்டின் பூஜை அறையில் கிழக்கு முகமாக அமர்ந்து “ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ” என்ற மந்திரத்தை 54 அல்லது 108 முறை ஆத்மார்த்தமாக சொல்லி அம்மனை தொடர்ந்து பூஜை செய்துவர கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.
பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்கும் பொழுது “ஓம் க்லீம் ரதிதேவி சமேத ஸ்ரீ காம தேவாய நமஹ” என்ற மந்திரத்தை மூன்று முறை ஜெபித்து திலகம் வைத்தால் தம்பதியினரடையே ஒற்றுமை மேலோங்கும்.
கணவன் மனைவி ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அர்த்தநாரீஸ்வரரை மனதில் நினைத்து பூஜை செய்து வர பிரிந்து தம்பதிகளும் அவர்களின் தவறுகளை உணர்ந்து ஒன்றுசேர்வார்கள்.
வெள்ளிக்கிழமையில் நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
இரண்டு நாகங்கள் இணைந்திருக்கும் நாகராஐர் சிலைக்கு ராகுகாலத்தில் அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, செவ்வரளி மலர்களை சூட்டி நாகராஜனை முழுமனதுடன் வணங்கி, கணவன் மனைவி பெயருக்கு அர்ச்சனை செய்தால் அவர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
அசோக மரத்தின் இலையை எடுத்து அதனை கழுவி, ஆஞ்சநேயரிடம் பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று வேண்டுதல் வைத்து, சிகப்பு சந்தனத்தால் அசோக மர குச்சியை வைத்து அந்த இலையின் மீது சிறியதாக சீதாராம் என்று ஒன்பது முறையும், இலையின் நடுவில் தம்பதியர் இருவரின் பெயரையும் எழுதி பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். இவ்வாறு செய்தால் பிரிந்த தம்பதியினர், நேசிப்பவர்கள், காதலிப்பவர்கள் ஒன்றுசேர்வார்கள்.
கணவனைப் பிரிந்த பெண்கள் 27 கொண்டைக் கடலைகளை கணவரின் துணி அல்லது ஏதேனும் ஒரு மஞ்சள் துணியில் வைத்து மூட்டையாக கட்டி கொள்ள வேண்டும். அதனை பெண்கள் 27 நாட்கள் அவர்கள் உறங்கும் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். 27 நாட்கள் முடிந்ததும் அதிலுள்ள கொண்டைக் கடலைகளை உள்ளங்கையில் வைத்து குரு பகவானை நினைத்து பிரிந்த என் கணவர் என்னுடன் வந்து சேரவேண்டும் குருபகவானே என்று வேண்டிக் கொண்டு அவற்றை ஆறு, குளம், கடல் இவைகளில் ஏதேனும் ஒன்றில் போட்டு விட வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் தீபாவளியை தொடர்ந்து வரும் கேதார கௌரி விரதத்தை முறையாக மேற்கொண்டால் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். இவ்வாறான பூஜை முறைகளை பின்பற்றி பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாழ்த்துகிறோம்.