நம்மூரில் பூரி செய்வதென்றால் கோதுமை மாவு அல்லது மைதா மாவு இதை வைத்து தான் செய்வார்கள். இந்த மலபார் ஸ்பெஷல் பூரியை வெறும் அரிசி மாவை வைத்தே அட்டகாசமான சுவையில் செய்து விடலாம். வாங்க இப்போ அந்த ஸ்பெஷல் பூரியை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு – 2 கப்
- தேங்காய் துருவியது – 1 கப்
- பெரிய வெங்காயம் -1
- சீரகம் -1/2 ஸ்பூன்
- உப்பு -1/4 ஸ்பூன்.
செய்முறை
இந்த மாவு பிசைவதற்கு முன்பாக ஒரு மசாலா பேஸ்ட் அரைக்க வேண்டும். அதற்கு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், வெங்காயத்தை கொஞ்சம் பெரிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் சீரகம் உப்பு என அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஒரு பவுலில் அரிசி மாவை சேர்த்து அத்துடன் அரைத்த இந்த விழுதையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கலந்து கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு தண்ணீர் போதவில்லை என்றால் மட்டும் லேசாக தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள் போதும். மாவை பிசைந்த பிறகு ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை அப்படியே வைத்தால் போதும் அதிக நேரம் வைக்கக் கூடாது.
அடுத்து பூரி சுட தேவையான அளவில் மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பாலித்தீன் கவரை போட்டு அதன் மீது எண்ணெய் தடவி நீங்கள் உருட்டி வைத்த உருண்டையில் ஒன்றை எடுத்து வைத்து அதன் மீது இன்னொரு கவரை வைத்து ஒரு தட்டு மேலே வைத்து அழுத்தினால் உங்களுக்கு வட்டமாக பூரி தயாராகி விடும். இந்தப் பூரியை பூரி கட்டையில் வைத்து தேய்க்க முடியாது இப்படி தான் திரட்டி எடுக்க வேண்டும்.
அதன் பிறகு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான உடன் அடுப்பை லோ ஃப்லேமில் மாற்றாமல் எண்ணெய் நல்ல சூட்டுடன் இருக்கும் பொழுது ஒவ்வொரு பூரிகளாக போட்டு சுட்டு எடுத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: மைசூர் சட்னி அரைப்பது எப்படி
இதில் வெங்காயம் தேங்காய் விழுது எல்லாம் சேர்த்து அரைத்து இருப்பதால் வெறும் பூரியே சாப்பிட நன்றாக இருக்கும். இருந்தாலும் இதற்கு பூரி கிழங்கு, தக்காளி சட்னி, சாம்பார் போன்றவை எல்லாம் இதற்கு நல்ல காம்பினேஷன் ஆக இருக்கும் நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.