மனிதனுக்கு இருக்கும் பிரச்சனைகளில் மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்படுவது கடன் பிரச்சனையே. ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்பது ஏற்பட்டால் அவன் அரசனாக இருந்தாலும் ஆண்டியாக போவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஆன்மீகம் குறித்த இந்தப் பதிவில் அந்த மரத்தின் இலையை உபயோகப்படுத்தி நாம் பரிகாரம் செய்வதால் கடன் நிவர்த்தி ஆகும் என்றும் அதோடு ராஜ யோகமும் ஏற்படும் என்றும் தான் பார்க்க போகிறோம்.
ராஜ யோகம் அருளக்கூடிய மரமாகவும், அனைத்து மரங்களுக்கும் அரசனாக விளங்கக்கூடியது அரசமரம் ஆகும். மருத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் அரச மரத்திற்கு பல நல்ல பலன்கள் இருக்கின்றன. ஆதலால் தான் அரச மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். மேலும் இந்த அரச மரத்திற்கு நவகிரகங்களை ஈர்க்கும் சக்தி உள்ளது. இன்றளவும் மார்கழி மாதத்தில் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகருக்கு நீரை ஊற்றி விட்டு அரச மரத்தை சுற்றி வரும் வழக்கம் பல பேரிடமும் இருக்கிறது. அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த அரச மரத்தின் இலையில் பரிகாரம் மேற்கொள்வதன் மூலம் நமக்கு ஏற்படும் நன்மைகளை பார்ப்போம் வாருங்கள்.
அமாவாசை நாளன்று 9 அரசமர இலைகளை பறித்து வரவேண்டும். அதே போல நட்டு மருந்து கடையில் கிடைக்கும் அரகஜா மையை வாங்கி கொள்ளுங்கள். இப்போது அரச இலைகளை மஞ்சள் கலந்த நீரில் கழுவ வேண்டும். பிறகு ஒரு சுத்தமான தாம்பாளத்தை எடுத்து அதில் அந்த அரச இலைகளை வட்டமாக பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பரப்பும் பொழுது இலையின் காம்பானது உள்புறமும் நுனியானது வெளிப்புறமும் இருப்பது போல் இருக்க வேண்டும். தாம்பாளத்தின் நடுவில் பச்சரிசியை வைத்து, அதற்கு மேல் ஒரு எலுமிச்சம் கனியை வைக்க வேண்டும். அரகஜா மையை நடுவிரலில் தொட்டு ஒவ்வொரு அரச இலைக்கும் பொட்டு வைக்க வேண்டும். மேலும் எலுமிச்சம் பழத்தின் நடுவிலும் பொட்டு வைக்க வேண்டும். பிறகு வாசனை மிகுந்த குங்குமத்தை அந்த அரகஜாவின் மேல் வைக்க வேண்டும். இந்த தாம்பாளத்தை பூஜை அறையில் இருக்கும் சுவாமி படத்திற்கு முன்பு வைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.
இவ்வாறு நாம் தொடர்ந்து ஒவ்வொரு அமாவாசையும் செய்ய வேண்டும். அமாவாசை கழித்த மறுநாள் இந்த பொருட்கள் அனைத்தையும் கால்படாத இடத்திலோ அல்லது தண்ணீரிலோ போட்டு விட வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் ராஜயோகம் நமக்கு ஏற்படும். மேலும் நம் உடம்பில் இருக்கக் கூடிய ராஜசக்கரமானது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இயங்க ஆரம்பிக்கும். தெளிவான மனம் கிடைக்கும். அதிஷ்ட தேவதைகளை வீட்டிற்குள் வரவழைக்கும்.
சனிக்கிழமை அன்று ஒரு அரச மர இலையை பறித்து வந்து அதை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பூஜை அறையில் சுவாமியை பார்த்தவாறு இலையின் காம்பு இருக்குமாறு வைத்து, அதன் மேல் ஒரு அகல் விளக்கை வைக்க வேண்டும். அகல் விளக்கின் தீபமானது சுவாமியை பார்த்தவாறு ஏற்ற வேண்டும். அந்த அகல் விளக்கில் பச்சை நிற திரியை போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு நாம் தொடர்ந்து 48 வாரங்கள் சனிக்கிழமை தோறும் செய்ய வேண்டும். இயலாதவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் செய்யலாம். இந்த பரிகாரத்தை தொடங்கும் நாள் கண்டிப்பாக சனிக்கிழமையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: கிராம்பை இந்த பொருளுடன் சேர்த்து எடுத்து சென்றால் வெகுநாட்களாக பணத்தை தராமல் இழுத்து அடித்தவர்கள் கூட உங்களை பார்த்ததும் ஓடி வந்து பணத்தை திருப்பி தந்து விடுவார்கள்.
இவ்வாறு நாம் பரிகாரம் செய்வதால் நம்முடைய தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். எவ்வளவு பெரிய தொகை கடனாக இருந்தாலும், அந்தக் கடன் படிப்படியாக தீரும். நாம் நினைத்தது அனைத்தும் நடக்கும். சங்கல்பங்கள் நிறைவேறும். மகத்துவமிக்க அரச மரத்தை வழிபடுவதுடன் அரச மரத்தின் இலையை வைத்து நம் வீட்டிலேயே இந்த பரிகாரங்களை மேற்கொண்டு ராஜ யோகம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.