இரவு தூக்கம் மட்டும் நமக்கு நிம்மதியாக இருந்து விட்டால் போதும். அடுத்த நாள் விடியல் நிச்சயமாக நல்ல விடியலாகத் தான் இருக்கும். இரவு தூக்கம் இல்லாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தால் அதிகாலை வேளையில் சீக்கிரம் கண் விழிக்க முடியாது. அவதி அவதியாக கண்விழித்து அவசர அவசரமாக வேலையைத் தொடங்கி அன்றைய நாள் முழுதும் பெரிய தலைவலியாக செல்லும். இரவு நல்ல தூக்கத்தை வரவைக்க, நாம் பின் சொல்லக் கூடிய சில விஷயங்களைப் பின்பற்றினாலே போதும். நம்முடைய உடலும் ஆரோக்கியம் பெறும். மனதும் தெளிவுபெறும். வாழ்வும் பிரகாசமாக இருக்கும். சரி வாங்க அந்த சின்ன சின்ன டிப்ஸ் நாமும் தெரிந்துகொள்வோம்.
இரவு 8 மணிக்கு முன்பாகவே இரவு உணவை சாப்பிட்டு விடவேண்டும். கூடுமானவரை இரவு 9 மணிக்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டு முடித்து விடுங்கள். அதன் பின்பு தேவையான அளவு மட்டும் தண்ணீரை பருகிவிட்டு, 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு உள்ளேயே அங்குமிங்குமாக லேசாக நடக்க வேண்டும். வேகமாக ஓடக்கூடாது உடல் அசதி ஏற்படக்கூடாது கால்களுக்கு மட்டும் கொஞ்சம் ரிலாக்ஸ் தேவை என்பதால் வீட்டிற்குள்ளேயே நடக்க வேண்டும்.
நீங்கள் பெண்களாக இருந்தால் சாப்பிட்டு முடித்துவிட்டு சமையலறையை சுத்தம் செய்யக்கூடிய வேலையை கவனித்தாலே போதும். உங்களுக்கு எந்த ஒரு உடற்பயிற்சியும் தேவை இருக்காது. அதன் பின்பு குளியலறைக்கு சென்று உங்களுடைய பாதங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் இன்னும் சிறப்பு. அதன் பின்பு படுக்கை அறைக்கு வந்து பாதங்களை ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். ராத்திரி நேரத்தில் கால் பாதங்களில் ஈரத்தோடு படுத்தால் தோஷம் என்று சொல்கிறது சாஸ்திரம்.
அதன்பின்பு படுப்பதற்கு முன்பாக உங்களுடைய குல தெய்வத்தின் பெயரையும், இஷ்டதெய்வத்தை பெயரையும் 12 முறை மனதார உச்சரித்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு 100 லிருந்து 1 வரை நண்பரை ரிவர்ஸில் மனதிற்குள் எண்ணிக் கொள்ள வேண்டும். அவசர அவசரமாக எண்ணக்கூடாது. நிதானமாக பொறுமையாக எண்ணுவதற்கு தொடங்குங்கள். அதன்பின்பு மனதை அமைதிப்படுத்தி கொண்டு ‘நாளை எனக்கு நல்ல நாள்’ என்பதை மட்டும் மனதில் ஆழப் பதிய வைத்துக்கொண்டு உறங்கினால் நிச்சயமாக உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.
இது பொதுவாக எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய விஷயம். குறிப்பாக இரவு 11 மணியிலிருந்து 3 மணிக்குள் நல்ல ஆழ்ந்த உறக்கம் இருந்தால் நம்முடைய ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடல் உறுப்புகளும் சீராகச் செயல்பட தொடங்கும். இரவு நேர வேலை செய்பவர்களுக்கு இது நிச்சயம் பொருந்தாது. அவர்களுக்கு வேறு வழியே கிடையாது. இரவில் கண்விழித்து வேலை செய்தால் பகலில் உறங்க வேண்டும். சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
தினமும் வீட்டிற்கு வருவதற்கு இரவு 10 மணி ஆகிவிடும். அதன் பின்பு சாப்பிட்டு படுக்க நடுராத்திரி 12 மணி ஆகிறது. இவர்கள் என்ன செய்வது. இரவு சாப்பிட்டு தானே ஆகவேண்டும். நேரம் கழித்து சாப்பிட்டாலும், சாப்பிட்ட உடன் படிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளாதீர்கள். சிறிது நேரம் நாற்காலியில் அமர்ந்து உங்களுடைய கால் பாதத்திற்கு கீழே சிறியதாக மேட் விரித்துக் கொண்டு உங்களுடைய கால் பாதங்களை இரண்டு நிமிடம் மெதுவாக ஆட்டிக் கொடுங்கள். தையல் மிஷின் மிதிப்பது போல ஆட்டினால் கூட போதும். லேசாக கால் பாதங்களை ரிலாக்ஸ் செய்து கொண்டு, மேலே சொன்னபடி உங்களுடைய கால்களை கழுவிக் கொண்டு ஈரத்தை துடைத்து விட்டு குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி விட்டு நம்பரை கவுன் செய்து விட்டு, ‘நாளைய தினம் எனக்கு நல்ல நாள்’ என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டு உறங்கச் செல்லும் போது நிச்சயமாக உங்களுக்கு நல்ல தூக்கம் என்பது வரும். முயற்சி செய்து பாருங்கள்.